திருகோணமலை மாவட்டத்துக்கான பிரதான "அத்தம" தூய்மை வேலைத்திட்டம் இ
கிளீன் ஸ்ரீலங்கா தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் கீழ், திருகோணமலை மாவட்டத்துக்கான பிரதான "அத்தம" தூய்மை வேலைத்திட்டம் இன்று (08) வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.
வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன ஆகியோர் இதனை உத்தியோபூர்வமாக ஆரம்பித்து வைத்தனர்.
திருகோணமலை மாவட்ட செயலகம் மற்றும் திருகோணமலை பட்டிணமும் சூழலும் பிரதேச செயலகமும் இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தன.
திருகோணமலை - கண்டிவீதி உவர்மலை சந்தியிலிருந்து அபயபுரம் வரையிலான பகுதி வரைக்கும் இந்த தூய பணி இடம்பெற்றது.
இதில், திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன், திருகோணமலை பட்டிணமும் சூழலும் பிரதேச செயலாளர் என்.மணிவண்ணன் மற்றும் திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள், பொலிஸார், முப்படையினர், உள்ளூராட்சி மன்றப் பிரதிநிதிகள், தன்னார்வ அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் எனப் பெருமளவிலானோர் பங்கேற்று சுற்றுச்சூழலை சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டனர்.
பொது இடங்களில் காணப்பட்ட கழிவுகள் அகற்றப்பட்டதுடன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பொதுச் சுகாதாரம் மற்றும் சமூகப் பொறுப்புணர்வை வலுப்படுத்தும் வகையில் விழிப்புணர்வு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன.
சுத்தமான, பசுமையான மற்றும் நிலைத்திருக்கும் திருகோணமலையை உருவாக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட "அத்தம" வேலைத்திட்டம், பொதுமக்களின் பாராட்டைப் பெற்றதுடன், அனைவரின் ஒத்துழைப்புடனும் வெற்றிகரமாக நிறைவுற்றது.




No comments