திருமலையில் சைவநெறி முறைப்படி திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட செக் குடியரசு ஜோடி
செக் குடியரசைச் சேர்ந்த இருவர் திருகோணமலையில் உள்ள விடுதி ஒன்றில் இன்று (27) சைவநெறி முறைப்படி திருமண பந்தத்தில் இணைந்து கொண்டனர்.
திருகோணமலை சாம்பல்தீவு பாம் பீச் ரிசோட் விடுதியில் வைத்து யோகாசன குருவான சிவதிரு. கலியுகவரதனின் முன்னிலையில் திரு.மைக்கல் என்பவரும், செல்வி. சன்ரா என்பவரும் இன்று (25) திருமண பந்தத்தில் இணைந்து கொண்டனர். இதன்போது ஒருவரை ஒருவர் இறுதி மூச்சு வரை இன்பத்திலும் துன்பத்திலும் அன்பு செய்து வாழ்வோம் என்று உறுதிகூறி குருவால் வழங்கப்பட்ட உருத்திராக்கம் மணி மாலையை தாலிக்குப் பதிலாக அணிவித்துக் கொண்டனர். இதன்போது குருவினால் மாப்பிளைக்கும் பெண்பிள்ளைக்கும் சிவலிங்கம் ஒன்று வழங்கப்பட்டது.
யோகாசன குருவான சிவதிரு. கலியுகவரதன் அவர்களினால் இந்த விடுதியில் வைத்து வெளிநாட்டவருக்கு சைவநெறிப்படி நடத்தி வைக்கப்பட்ட 10 ஆவது திருமண பந்தம் இதுவாகும். குறித்த விடுதியின் உரிமையாளரான மறெக் நெமெக் செக் குடியரசு பிரஜை ஆவார். அவர் யோகக் கலையை பயில்வதற்காக திருக்கோணமலையிலுள்ள யோகாசன குருவான சிவதிரு. கலியுகவரதனின் நண்பரானார். அவர் சைவ நெறிமுறையுடனான வாழ்வு பற்றி நாட்டம் கொண்டிருந்தார். இந் நிலையில் தனது நாட்டு பிரஜைகளுக்கு சைவநெறிமுறையுடனான திருமண பந்தத்தை தனது விடுதியில் வைத்து சிவதிரு கலியுகவரதன் மூலமாக திருமணபந்தத்தில் இணைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.







No comments